Monday, October 20, 2008

உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

கலைஞர் பேச்சு!
இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம் - அதனை வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.
முடிவே கிடையாதா?
இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல; அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா?'' என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி?
"தென் திசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் பூரிக்குதடடா!'' எனப் பாடினாரே பாவேந்தர் - அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன் ராவணனின் புகழ் பாடும் கவிதையினைப் படிக்கும் போதெல்லாம் சிந்தையும், தோள்களும் பூரிக்கும் என்பது உண்மை! ஆனால் இன்று, சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் துடிக்குதடடா! என்ன சொல்வது? என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி!
21-ந் தேதி தமிழகத் தலைநகராம் சென்னையிலே நடைபெறும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான மனித சங்கிலி சரியாக 3 மணிக்கு தொடங்கும்.
தமிழனாக பிறந்தவன்
தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ அள்ளி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது! வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள். கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.
தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும்- இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

No comments: