Sunday, October 5, 2008

புலவர்களின் தன்மான உணர்ச்சி!

க‌ட்டுரை ஆசிரிய‌ர்: க‌.சிவ‌ம‌ணி
சங்கப் புலவர்களின் பாட்டுத் திறமும், பாடல்களை நிலைக்களனாகக் கொண்டு பாடுபொருளை எடுத்தியம்பும் பாங்கும் நம்மை வசீகரிக்கச் செய்வதோடு வளமான வாழ்வை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதாகவும் உள்ளமை வெளிப்படை. அத்தகைய சங்கப் பாடல்களின் வழி அறியப்படும் புலவர்களின் தன்மான உணர்வு வெளிப்படும் இடங்கள் பல உள்ளன.

சங்க காலத்தில் அரசனுக்குத் தோன்றாத் துணையாகப் புலவர்கள் செயல்பட்டு வந்தனர். நாட்டை ஆளும் அரசனின் செயல்பாடுகளில் குற்றங்கள் தென்படின், குற்றங்களைச் சுட்டிக்காட்டித் திருத்தும் பெரும் பொறுப்பும் புலவர்களுக்கு இருந்தது. அத்தகைய புலவர்களின் அறிவுரைகளைச் சிரமேற் கொண்டு செயல்படும் அரசர்கள், புலவர்கள் விரும்பும் பரிசை அள்ளிக்கொடுத்து மகிழ்வித்தல் சங்ககால மரபு. இதனால் புலவர் குழாம் ஓரளவு வறுமை நீங்கிச் செழுமை கண்டன.

அரசரைப் புகழ்ந்து, பாடிப் பரிசில் பெற வேண்டிய சூழலில் புலவர்கள் இருப்பினும் பரிசுக்காக மட்டும் அரசரைப் பாடி இரந்து நிற்கும் வழக்கம் ஒரு போதும் இருந்ததில்லை. மன்னரைப் பாடிப் பரிசுபெற வந்த புலவர்கள் தங்களுக்கு அரசவையில் உரிய மரியாதை கிடைக்கப் பெறாத நிலையும் புலவர்களுக்கு இருந்து வந்ததுண்டு. இத்தகு சூழ்நிலையில் பரிசைப் பெறாமல் திரும்பிவிடுவர். இத்தகைய காட்சிகள், சங்கப் புலவர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.


மன்னர்-புலவர் உறவு


சங்க காலத்தில் புலவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மரியாதையை எடுத்தியம்பும் பாடல்கள் அனேகம். மன்னர்களின் உள்ளத்தில் புலவர்க்கென எத்தகைய இடம் தந்தனர் என்பதைக் கீழ்க்காணும் பாடல் விளக்கி நிற்கிறது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றைச் சான்றாகக் காட்டுதல் பொருந்தும்.


""பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புனனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற்காலை நில்லலன் மன்னே''

(புறம்-215,7-9)


இந்தப் பாடலில், "செல்வம் என்னிடம் குவிந்த காலத்து என்னைக் காண பிசிராந்தையார் வராவிட்டாலும், எனக்கு துன்பம் ஒன்று வந்து சேரும் சூழல் ஏற்படுமாயின் அப்போது என்னைக் காண வந்துவிடுவார்' என்கிறார்.

இதன் மூலம் மன்னரும் புலவரும் எத்தகைய புரிதலைக் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவுபடுத்திச் செல்கிறது.

அரசனை நாடிச் சென்று பாடிப் பரிசில் பெற எண்ணிப் புலவர்கள் செல்லும்போது புலவர்களின் வறுமை நிலையைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்குதல் மன்னனின் கடமை. இச் சூழ்நிலையில் பரிசை அரசன் வழங்குதல் முக்கியமில்லை. இன்முகத்துடன் புலவரை வரவேற்று அப்பரிசை வழங்குகிறானா என்பதே கருதத்தக்கது. புலவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உரிய பரிசினைத் தந்து மகிழ்வித்தல் வேண்டும்.

இனி வரும் பெருந்தலைச்சாத்தனாரின் பாடல், தன்மான உணர்வு மிக்க புலவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக அமைந்திருத்தலை எடுத்தியம்புகிறது.


""முற்றிய திருவின் மூவர் ஆயினும்

பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே''

(புறம்-205-1-2)


என்ற வரிகள், பரிசில் வழங்கும் புரவலன் செல்வம் கொழிக்கும் மூவேந்தர்களாயினும் மனதில் அன்பு இன்றிக் கொடுத்தால் அதனை ஏற்கமாட்டோம் என்பதைப் பறைசாற்றுவதன் வாயிலாக, புலவர்கள் தன்மான உணர்ச்சி மேலோங்கப் பெற்றவர்களாக இருந்து வந்த நேர்த்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்றே, பரிசில் நீட்டித்த மூவன் என்ற மன்னனைப் பற்றிப் பாட வந்த பெருந்தலைச்சாத்தனார் கூறும் உவமை சிந்திக்கத்தக்கது.

மூவன் என்ற அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் நாரை முதலிய அஃறிணை உயிர்கள் கூட மதுவுண்ட களைப்பில் கண்துயிலும். இத்தகு வளமிக்க நாட்டை உடைய மன்னா! உனைக் காணவந்த புலவர்கள் பரிசு பெறாமல் மீளும் நிலையை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை மூவனுக்குப் புரியவைக்க எண்ணிய புலவர்,

""பலகனி நசைஇ அல்கு விசும்பு உகந்து

பெருமலை விடரகம் சிலம்ப முன்னி

பழனுடைப பெருமரம் தீர்ந்தென கையற்று

பெறாது பெயரும் புள்ளினம் போல''

(புறம்-209-7,10)


என்ற வரிகளில், பல்வேறு மலையிடங்களில் பழுத்த கனிகள் செறிந்த மரங்களை நாடிச் சென்ற பறவைகள், பருவம் மாறிய நிலையில் பழங்களற்ற வெற்று மரங்களைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்புதலைப் போல நீயும் எங்களுக்குப் பரிசில் தர மறுத்தால் நாங்கள் வருந்துவோம் என்று கூறுகின்றார். இங்கு புலவரின் வருத்தம் மேலிடுவதாகத் தோன்றினாலும் அஃறிணை உயிர்கள் கூட தாம் வேண்டுவனவற்றைப் பெற்றுத் துய்க்கும் வளமுள்ள நாட்டில் என் போன்ற புலவர்களுக்கு ஈயாமல் இருத்தல் உன் ஆட்சிக்கு அழகல்ல. எனவே புலவர்க்கு ஈதலே மன்னர்க்கு அழகு என மறைமுகமாக இடித்துரைப்பதில் புலவரின் தன்மான உணர்ச்சி வெளிப்படக் காணலாம்.

அரசனைக் கண்டு அவன் திறம் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வதையே விரும்புவர் புலவர். அவ்வாறு பரிசில் பெறக் கருதி அரசனிடம் சென்ற புலவரை உதாசீனப்படுத்தும் விதத்தில் பரிசுப்பொருளைத் தானே முன்னின்று வழங்காமல் வேறொருவரிடம் கொடுத்து அளிக்கச் செய்வதைப் புலவர்களின் தன்மான உள்ளம் என்றும் ஏற்றதில்லை.

அதியமான் நெடுமான்அஞ்சியிடம் பரிசில் பெறக் கருதி நெடுந் தொலைவிலிருந்து வந்த பெருஞ்சித்திரனார், தானே முன் வந்து பாராட்டிப் பரிசு தரத்தவறிய அரசனின் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசன் தரும் பரிசு தினை அளவுடையதாயினும் விருப்புடன் நேரில் தருதலையே விரும்பும் எம் உள்ளம் என்பதைக் கூற வந்த புலவர்,


""காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லென், பேணி

தினை அனைத்து ஆயினும் இனிது-அவர்

துணை அளவு அறிந்து நல்கினர் விடினே''

(புறம்-208,6-9)


என்ற வரிகள், என் பாட்டுத் திறத்தின் பாங்கறிந்து நேரில் வந்து பரிசு வழங்காத நிலையைக் கண்டிப்பதோடு வெறும் பொருளை மட்டும் விரும்பிப் பாடும் வாணிகப் பரிசிலன் அல்லன் யான் என்பதை நேரிடையாகவே எடுத்துரைக்கிறார். அத்துடன் உள்ளத்தில் உண்மையான விருப்பமுடன் தினையளவு பரிசு வழங்கினாலும் அதை விருப்புடன் ஏற்பர். அதே சமயம் பரிசை நேரில் தந்து மகிழாத அரசனின் செயலைச் சுட்டிக்காட்டி, தன்மான உணர்ச்சியின் உறைவிடமாகப் புலவர்கள் விளங்கிய பாங்கையும் அப்பாடல் இனிது எடுத்தியம்புவது மகிழத்தக்கது.

அரசனைப் பாடிப் பரிசில் பெறக்கருதி வந்த புலவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கத் தவறியதோடு பரிசுதர அரசர்கள் தாமதம் செய்வதைப் புலவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி விடுவர்.

அதியமான் நெடுமான் அஞ்சியைக் காணவந்த ஒüவையார், தனக்குப் பரிசில் நீட்டிக்கப்படும் நிலையில் பாடும் பாடல், புலவரின் தன்மான உணர்வு மேலிடும் பாடல்களுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வதாகும். அறிவும் புகழும் உடையவர்கள் இறந்து விட்டனர் என்பதற்காக இவ்வுலகம் வறுமையுறாது என்பதை எடுத்துக்காட்டி, மழுவைக் கொண்டு காட்டுக்குள் செல்லும் தச்சன் வேண்டிய அளவு பொருளைப் பெற்றுத் திரும்புதல் திண்ணம். எனவே உன்நாட்டை விட்டுச் செல்கிறேன் என்னும் கருத்தை விளக்கும் அப்பாடல் வருமாறு,


""அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே அதனால்,

காவினம் கலனே சுருக்கினெம் கலப்பை,

மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்ú

எத்திசை செலினும் அத்திசைச் சோறே''

(புறம்-206,8-13)


கற்றவர்க்கு எங்கு சென்றாலும் சிறப்புகள் வந்து சேரும் என்பதை உணர்த்த விரும்பி, காட்டுப் பகுதியில் மரங்களுக்குக் குறைவில்லாததுபோல் நாட்டில் மன்னர்களுக்கும் குறைவில்லை என்பதை மனதில் கொண்டு அதியமான் நாட்டைவிட்டு ஒüவை புறப்படுவதை நோக்குகையில், சங்கப் புலவர்கள் தன்மான உணர்வுமிக்கவர்களாக விளங்கிய திறம் இனிது பெறப்படுகிறது.

ந‌ன்றி: தின‌ம‌ணி.

No comments: